நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது: விசிக அறிவிப்பு!

விசிக சார்பில் இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரைப்படக் கலைஞர் சத்யராஜுக்கும் வழங்கப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

விசிக சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.சமூகம், அரசியல், பண்பாடு, கலை – இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைவாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி” விருதும் வழங்கி வருகிறோம் .

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம்-க்கும், ‘பெரியார் ஒளி’ விருது திரைப்படக் கலைஞர் சத்யராஜிக்கும் வழங்கப்படுகிறது. ‘மார்க்ஸ் மாமணி’ விருது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவுக்கும், ‘காமராஜர்’ விருது புதுச்சேரி முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்துக்கும், ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது பவுத்த ஆய்வறிஞர் பா.ஜம்புலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. ‘காயிதேமில்லத் பிறை’ விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவிக்கும், ‘செம்மொழி ஞாயிறு’ விருது யாழ்ப்பாணம் தமிழறிஞர் பேராசிரியர் அ.சண்முகதாஸுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.