அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்-சாண்டு விலை ரூ.1000 குறைப்பு!

எம்-சாண்டு விலையில் ரூ.1000/- குறைத்து விற்பனை செய்திட அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (27.04.2025) நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் 25.04.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனுவில் குறிப்பிட்டுள்ள பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் எம்-சாண்டு பி சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்படட விலையிலிருந்து ரூ.1000/- குறைத்து விற்பனை செய்யப்படும் என சங்கத்தினரால் ஏற்கப்பட்டது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33/- என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும்.

இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் எ.சரவணவேல்ராஜ், இ.ஆ,ப., கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.சின்னசாமி, சங்கத்தின் உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.