சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமானை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சி.ஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சிஆர்பிஎப் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அசோக் நகரில் உள்ள என்சிஎஸ் டெக்னாலாஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதேபோன்று விருகம்பாக்கம், சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல நிறுவனத்தின் இயக்குநர் ஏகே நாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கோயம்பேட்டில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் காலை முதலே நடைபெற்று வரும் இந்த அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை தொடர்பாக விரிவான தகவல் அமலாக்கத்துறை தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை.