பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு விழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: இன்று விசாரணை!

வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த விழாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கக்கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 2013-ம் ஆண்டு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு திருவிழாவில் பங்கேற்க சென்றவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சாதி கலவரம் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பு மக்கள் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 4 பேர் பலியாகினர். இந்த நிகழ்வுக்கு பின், சித்திரை முழு நிலவு கூட்டத்தில் அரசு அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு கூட்டம் நடத்துவது, எங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.