‘நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் செயல்பட்ட பிரதமர் மோடிக்கு நன்றி!’ என்று ஜி.கே. வாசன் கூறினார்.
இதுகுறித்து ஜி.கே. வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்திய அரசும், பாரதப் பிரதமரும் இந்திய நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்கும் விதமாக செயல்பட்டதற்கும், இந்தியாவிற்கு வெற்றியாக அமைந்திருப்பதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அரசும், பாரதப் பிரதமரும் பாகிஸ்தானுடைய தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது பாராட்டத்தக்கது.
இந்தியர்கள் மத்திய அரசுக்கு ஒத்த கருத்தோடு துணை நிற்பது கூடுதல் பலம். குறிப்பாக பாகிஸ்தானுடைய தாக்குதலுக்கு எதிர்வினையாக என்னென்ன செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ராஜதந்திரமான முடிவுகளும், நமது முப்படைகளின் தேசப்பற்றும் இந்தியாவின் பக்கம் தர்மத்தையும், வெற்றியையும் கொடுத்திருக்கிறது.
எனவே 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பையும் கொடுத்துக்கொண்டிருக்கின்ற இந்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.