ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் கோவில் விழாக்களை நடத்த வேண்டுமா? என்றும் மற்ற சமூகத்தினர் வேடிக்கை பார்க்கவேண்டுமா? என்றும் வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்படுவதாக ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் இதுதொடர்பாக முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர். அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.
அப்போது நீதிபதிகள், “பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்களா? பதில் மனு தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்களான சக்திவேல், செந்தில், வேலு ஆகியோர் நாளை நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.