ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துவிடுவார்கள். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிகம் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும். இதனால் கோடைக்காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வருஷா வருஷம் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான கோடை விழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் ஊட்டியில் இன்று சர்வதேச அளவில் புகழ் பெற்ற 127 வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. இன்று முதல் வரும் 27 ஆம் தேதி வரை என மொத்தம் 11 நாட்கள் நடக்கிறது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த ஸ்டாலின், தொடர்ந்து தன் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கண்காட்சியை பார்வையிட்டார். அவருடன் திமுக எம்பி ஆ ராசாவும் பார்வையிட்டார்.
ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று முன் தினம் முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது அவருக்கு அரசு அதிகாரிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நடக்கு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக, ஜெர்மனியம், சைக்ளோபின், பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்பட 275 வகையான விதைகள், நாற்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது.தொடர்ந்து பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 7½ லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதேபோல் மலர் மாடம் உள்ளிட்ட இடங்களில் 45 ஆயிரம் மலர் தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் ராஜராஜ சோழனின் அரண்மனை போன்று, 2 லட்சம் கார்னேசன் உள்பட பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. சோழ அரசின் பெருமைகளை விளக்கும் விதமாக 65 ஆயிரம் பூக்களால் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை வடிவம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 7 லட்சம் மலர்களால் செஸ், யானை என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று கண்ணாடி மாளிகை, கள்ளிச்செடி மாளிகை புதுப்பிக்கப்பட்டு, அங்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி, இந்த ஆண்டு 11 நாட்கள் நடக்கிறது. இதனால் பூந்தொட்டிகள் மற்றும் மலர் செடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவும் அரங்கம் மற்றும் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள், தோரணங்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை காண்பதற்கு பலரும் வருகை தருவார்கள் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக வரும் 31 ஆம் தேதி சமன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.