மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். யுபிஎஸ் ஆணையத்தின் மூத்த உறுப்பினரான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ சுக்லா, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதனின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. யுபிஎஸ்சி தலைவர் பதவிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதையடுத்து, அஜய் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த 1985-ஆம் ஆண்டின் கேரளப் பிரிவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அஜய் குமாா், கடந்த 2019 முதல் 2022 வரை பாதுகாப்புத் துறை செயலராக பொறுப்பு வகித்தவர். ஆத்மநிர்பர் பாரத், ஆயுதப்படை நவீனமயமாக்கல் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றியவர். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கேரள அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்திலும், மத்தியிலும் முக்கியப் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வு மற்றும் பிற முக்கியத் தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்துகிறது. இந்த ஆணையத்தில் தலைவா் மட்டுமன்றி அதிகபட்சம் 10 உறுப்பினா்கள் வரை இடம்பெறுவா். தற்போது 2 உறுப்பினா்கள் இடம் காலியாக உள்ளது. யுபிஎஸ்சி தலைவா், 6 ஆண்டு பதவிக் காலத்துக்கு அல்லது 65 வயதை எட்டும் வரை நியமிக்கப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.