பிரச்சினைகளுக்கு துணை நின்று மக்களின் நம்பிக்கையை பெறுங்கள் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். கட்சி வளர்ச்சிப் பணிகள், பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆனந்த் ஆலோசனை வழங்கினார். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தவெகவுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆனந்த் பேசும்போது, ‘‘காலம் குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் நமக்கான பணிகள் அதிகமாக இருக்கிறது. வீடு, வீடாக சென்று தவெகவின் கொள்கைகளை எடுத்துக் கூறுங்கள். மக்களின் நம்பிக்கையை பெறுங்கள். மக்கள் பிரச்சினைகளுக்கு தவெக என்றும் துணை நிற்கும் என்று கூறுங்கள். நம்முடைய நோக்கம், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது மட்டுமே. அதை மனதில் வைத்து பணிகளை மேற்கொள்ளுங்கள்’’ என்றார்.
இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களை விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கான பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். 6 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை நியமிக்கும் பணியும் நடந்து வருகிறது.