சிவகங்கையில் குவாரி விபத்தில் 5 பேர் மரணம்!

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேகா மெட்டல் குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 5 பேரில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்எஸ் கோட்டையை அடுத்த மல்லாங்கோட்டை கிராமத்தில் மேகா மெட்டல் குவாரி இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தினக்கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். இந்த குவாரியில் சுமார் 450 அடி ஆழம் கொண்ட குவாரி இயங்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து வெட்டப்படும் கற்கள் மற்றும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் கற்கள் ஆகியவற்றை கொண்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே குவாரியில் பாறையை உடைக்க வெடி வைக்கப்பட்டு இருந்திருக்கிறது.

இதன்பின் வெடி பயங்கர சத்தத்துடன் வெடிக்க, திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவில் சிக்கி வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதைந்திருக்கின்றனர். இதன்பின் மண் சரிவில் சிக்கிய தொழிலாளர்களை உடனடியாக மீட்க சக தொழிலாளர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விசாரணையில் குவாரியில் பணியாற்றிய அர்ஜித், ஆண்டிச்சாமி, கணேஷ், ஆறுமுகம் மற்றும் முருகானந்தம் ஆகிய 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் இந்த குவாரிக்கு முறையான அனுமதி பெறப்பட்டு புதுப்பிக்கப்ப்ட்டு வருகிறதா? அனைத்து வகையான விதிகளும் பின்பற்றப்பட்டதா? அல்லது சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்று விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த அர்ஜித் என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.