டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் டாஸ்மாக் பொது மேலாளர் (மொத்த விற்பனை மற்றும் நிர்வாகம்) சங்கீதா மற்றும் துணை பொது மேளாளர் (விற்பனை மற்றும் கொள்முதல்) ஜோதி சங்கர் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபர் ரத்தீஷ் வீடு உள்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது என்றும் வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பியது.