தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்த வைஷ்ணவி இந்த மாத தொடக்கத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து கட்சி சார்ந்த பணிகள் மற்றும் கூட்டங்களில் நிராகரிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார். இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்ட அறிக்கையில், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்து வந்ததாகவும் மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்தார். மேலும் தன் வளர்ச்சியைத் தடுப்பதாக நினைத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்கச் சிலர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறுக சிறுக சேர்த்த ரூ 5 லட்சத்தை வைத்து கட்சியில் இருந்து நலத்திட்ட உதவிகளை செய்ததாகவும் உயர்மட்ட கட்சி நிர்வாகிகளின் நிராகரிப்பால் அதை தொடர முடியவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து தவெகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
ஒரு பெண் சமூக பிரச்சனையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் “நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. என்னையும் அந்த வார்த்தைகள் விட்டுவைக்கவில்லை. என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” எனக் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த வைஷ்ணவி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைஷ்ணவி, “பாஜகவின் மற்றொரு திரையாக தவெக விளங்குகிறது என்பதுதான் உண்மை. தவெகவில் ஒரு வருடமாக பயணம் செய்தேன். அரசியலில் இளைஞர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் முன்னுரிமை கொடுப்பார்கள் என நினைத்தோம். அதனால்தான் இளைஞர்கள் , இளம்பெண்கள் தவெகவில் இணைந்தார்கள். ஆனால் அதிருப்தி தான் மிச்சம். அவர்கள் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இன்றைய தினம் திமுகவில் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
மேலும், திமுகவில் இணைந்தது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நான் கடந்த மே 3ஆம் தேதி தவெகவில் இருந்து விலகினேன். நான் ஒருபோதும் பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது, எனது நோக்கம் சமூக பணி செய்வதே, தினமும் மக்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்துவிட முடியாதா? என்றே நான் என் தினப் பொழுதை கடந்து வருகிறேன். தவெகவில் இருந்து விலகிய போதும் கூட எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தினமும் என்னால் முடிந்த மக்கள் பணியைச் செய்து வந்தேன். தவெகவில் இருந்து விலகியவுடன் பல கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தபோதும், நான் உடனே எந்த முடிவையும் எடுக்கவில்லை. என் அம்மா திமுகவில் கடந்த 15 வருடங்களாக களப்பணி செய்து வந்தார். நான் தவெகவில் இணைந்த சில மாதங்களுக்கு பிறகு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் எனது அரசியல் பயணத்திற்காகவும் என் அம்மா தன்னுடைய அரசியல் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருந்தார். ஆனால் நான் படும் கஷ்டங்களைக் கண்டு எனது தாயும் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டார்.
இப்போது நான் தீரக்கமான முடிவை எடுத்திருக்கின்றேன். எனது சமூகப்பணி தொடர நானும் எனது குடும்பமும் பாதுகாப்பாக இருக்க, தெளிவான, மக்களுக்கான அரசியலைக் கையில் எடுக்கவேண்டும் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்துள்ளேன். தமிழக வளர்ச்சிக்கு குறிப்பாக பிறக்கும் குழந்தை தொடங்கி, மழலை பிள்ளைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள், பெண்கள், குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள், அனைத்து துறை அரசு ஊழியர்கள் என எல்லா தரப்பிற்குமான அரசாக தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
முக ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, கல்வியில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் என மற்ற மாநிலத்திற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த ஆட்சியை காட்டிலும் தற்போது திமுக தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. நான் தவெகவில் இருக்கும்போது திமுகவின் மீது கடுமையாக விமர்சனங்கள வைத்திருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னையோ குடும்பத்தையோ தனிப்பட்ட முறையில் அவதூறுகள் பரப்புவது, மிரட்டுவது என எதுவும் நடந்தது இல்லை. எனது கருத்தை கருத்தியலாக எதிர்கொண்டனர். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாகவே அமைந்தது.
இனி எனது சமூகப்பணி முழு வீச்சுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் செய்துகொண்டு இருக்கும் மக்கள் பணிக்கு எந்த இடையூறும் வராது, நீங்கள் தொடர்ந்து களத்தில் இருந்து செயல்படுங்கள் என நம்பிக்கை கொடுத்த முன்னால் அமைச்சர், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அண்ணன் அவர்களுக்கும், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி அண்ணன் அவர்களுக்கும், மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் அண்ணன் அவர்களுக்கும், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அண்ணன் அவர்களுக்கும், கவுண்டம்பாளையம் பகுதிச் செயலாளர் சரத்விக்னேஸ் அண்ணன அவர்களுக்கும், கவுண்டம்பாளையம் வட்டக் கழக செயலாளர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வைஷ்ணவி திமுகவில் இணைந்தது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முன்னேறிட, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் ஜே.எஸ்.சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், கோவை மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்த செல்வி.வைஷ்ணவி தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் – இளம் பெண்கள் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.