உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் தக்க பதிலடி கொடுக்கும்: அதிபர் டிரம்ப்!

ரஷ்யாவிற்குள் வந்து உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என புதின் கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 1ம் தேதி இரு நாடுகளும் பெருமளவில் தாக்குதலை நடத்தி கொண்டன. இதுவரை இல்லாத வகையில் 472 டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. அதேநாளில் சுமார் ஒன்றரை ஆண்டு திட்டமிடலுக்கு பின் ஆர்க்டிக், சைபீரியா உள்ளிட்ட ரஷ்ய பகுதிகளில் உள்ள ராணுவ விமான படை தளங்கள் மீது டிரக்குகளில் இருந்த டிரோன்களை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் 40 விமானங்கள் சேதமடைந்தன. இதனால் ரஷ்யா கடும் கோபம் அடைந்தது.

இந்த தாக்குதல் நடைபெற்ற மூன்று தினங்களில் மற்றொரு தாக்குதலையும் உக்ரைன் நடத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து கிரிமியா நகரை இணைக்கும் கடல் பாலத்தின் தூண் மீது வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் அடுத்தடுத்த தாக்குதல்களால் கடும் கோபம் அடைந்துள்ள புதின், தக்க பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். ரஷ்யாவிற்குள் வந்து உக்ரைன் நடத்திய இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என புதின் கூறியதாக டிரம்ப் தெரிவித்தார். இதில் மிகவும் உறுதியாக இருப்பதாக புதின் தன்னிடம் சொன்னதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் இப்போது தான் தொலைப்பேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் உடன் உரையாடினேன். இந்த அழைப்பு சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. ரஷ்யாவின் விமானங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் குறித்தும் இரு தரப்பும் மாறி மாறி நடத்திய தாக்குதல்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இன்று நடந்த ஆலோசனை சிறப்பாகவே போனது. ஆனால், இதனால் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படும் எனச் சொல்ல முடியாது. விமான தளங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் புதின் உறுதியாக இருக்கிறார்” என்றார்.