பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை: ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையை, கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில், உட்கட்சி பிரச்சினையை தீர்க்க சில தினங்களுக்கு முன்பு தைலாபுரம் சென்று ராமதாஸை அன்புமணி சந்தித்து பேசினார்.

அன்றைய தினமே, ஆடிட்டர் குருமூர்த்தி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்பு குறித்து அன்புமணி எதுவும் சொல்லாத நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தியோ, நீண்ட கால நண்பர் என்ற முறையில் ராமதாஸை சந்தித்ததாக் தெரிவித்தார். வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜாக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாமகவை கூட்டணியில் சேர்க்கவே ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சென்னை வந்துள்ள ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி என்னை சந்தித்து பேசினர். இருவரும் நீண்டகால நண்பர்கள். ஆடிட்டர் குருமூர்த்தி நல்லவர். நல்ல மனது உடையவர். அறிவாளி. அவர் சொன்னால் நல்லது நடக்கும் என்று நானும் நம்புகிறேன். எல்லோரும் நம்புகிறோம். பாஜகவில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வரவில்லை. அன்புமணியுடனான கருத்து மோதலால் கட்சியில் எந்த பின்னடைவும் இல்லை. கட்சியில் நிலவி வரும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும். கட்சியில் நடக்கும் பிரச்சினை முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை பேசுவோம். கட்சியில் எல்லாம் நல்லபடியாக நடக்கும். யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.