எனது கேள்விகளுக்கு மழுப்பாமல் பதில் தாருங்கள். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மராட்டிய தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டிய நிலையில், தேர்தலில் பாதகமான முடிவு கிடைத்ததால் தேர்தல் கமிஷனை அவமதிப்பதாக தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. இதற்கு ராகுல் காந்தி பதிலளித்து உள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘அன்பான தேர்தல் கமிஷனே, நீங்கள் ஒரு அரசியல் சாசன நிறுவனம். கையெழுத்து போடாத, தப்பிக்கும் நோக்கிலான குறிப்புகளை வெளியிடுவது, தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் முறை அல்ல. உங்களுக்கு மறைக்க எதுவும் இல்லை என்றால், எனது கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பாமல் பதிலளித்து நிரூபியுங்கள்’ என குறிப்பிட்டு உள்ளார்.
இதற்காக மராட்டியம் உள்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றம் சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் மற்றும் மராட்டிய வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு பதிவான அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் வெளியிடுமாறும் அறிவுறுத்தி உள்ளார். கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது உங்கள் நம்பகத்தன்மையை பாதுகாக்காது என்றும், உண்மையை கூறுவதே அதை செய்யும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
முன்னதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிகார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக அவர் கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது சட்டத்தின் ஆட்சியை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தையும் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியே காங்கிரஸ் கட்சிக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எழுப்பும்போது, உண்மைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிகிறது. யாராவது தவறான தகவலை பரப்பினால் அது சட்டத்தை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.