அகமதாபாத் விமான விபத்து பெரும் கவலை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் இன்று(நேற்று) பிற்பகலில் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம் மெகானி நகர் பகுதியில் குடியிருப்பின் மீது விழுந்து தீப்பிடித்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன.
அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் ட்ரீம் லைனர் விமானங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்ட நிலையில், இந்த விபத்து பெரும் கவலை அளிக்கிறது. விமான விபத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, அதன் மூலம் மீதமுள்ள பயணிகளை மீட்க வேண்டும். விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த பிற பயணிகள் உயிருடன் காப்பாற்றப்பட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.