அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 1 பயணியை தவிர மற்ற எல்லோரும் பலியான நிலையில் அந்த 1 பயணி எப்படி உயிர் பிழைத்தார், எப்படி தப்பித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார். விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள். ரமேஷ், அவசர வழியின் பின்புறம் இருந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்தார். மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் காயமடைந்த ரமேஷ் ஆம்புலன்ஸை நோக்கி நடந்து செல்கிறார். மற்றவர்களின் நிலை குறித்து அங்கிருந்தவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்ததாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியது. “11ஏ இருக்கையில் பயணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழப்புகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்” என்று மாலிக் கூறினார்.
ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை விமானத்தின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக உள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது. விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத இவர்.. விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி.. சுதாரித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார்.
ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்: விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர் கூறியபோது, ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்றார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.