சென்னை போரூர் அருகே மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் விபத்து: ஒருவர் பலி!

சென்னை ராமாபுரம் பகுதியில் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை ரெயில்வே பாலத்தின் கீழ் 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக 2 தூண்களுக்கு மத்தியில் ராட்சத ‘கர்டர்’ அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத ‘கர்டர்’ நேற்று இரவு திடீரென சரிந்து கீழே மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் விழுந்தது. அப்போது பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது விழுந்தது. ராட்சத ‘கர்டர்’ அடியில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரெயில்வே பணி அதிகாரிகள் விரைந்து வந்து சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர்.

மேலும் கீழே விழுந்த 2 ராட்சத ‘கர்டர்’களை ராட்சத கிரேன் மூலம் அகற்றும் பணிகள் நடக்கிறது. இதன் பின்னர் தான் பாலத்தின் அடியில் சிக்கியவரின் உடல் மீட்கப்படும். அதன்பிறகே அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.