தேசதுரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, தேசதுரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வைகோவுக்கு எதிராக ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.