தமிழர்களின் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடுகள் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
வரவிருக்கும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி (NTK) தனித்துப் போட்டியிடும் என்பதை அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், நாட்டின் ஒட்டுமொத்த அரசியலையும் மாற்றுவதே தனது நோக்கமும் கனவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்து களத்தில் பணியாற்றி வருகிறது. கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “கூட்டணி என்பது கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவர் தனது மக்களை நம்பி, மக்களுக்காக, மக்களோடு நின்று போராடுவோம் என்று கூறினார். தீமையை வைத்து மற்றொரு தீமையை ஒழிக்க முடியாது என்ற தனது கொள்கையை அவர் வலியுறுத்தினார்.
“நெருப்பை வச்சு நெருப்பை அணைக்க முடியாது,” என்று கூறிய சீமான், தீமைக்கு மாற்று தீமை அல்ல என்றும், நன்மைதான் மாற்று என்றும் வலியுறுத்தினார். இந்த கோட்பாட்டிற்கு, நபிகள் நாயகம், இறைமகன் இயேசு, மற்றும் பகவான் கிருஷ்ணர் ஆகியோரின் போதனைகளை அவர் மேற்கோள் காட்டினார். “ஒரு கொடுமையை ஒழித்துவிட்டு அதைவிட கொடுமையான ஒன்றை ஆட்சியில் அமர்த்துவது” சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுக தனது ஆட்சியின் சாதனைகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்து வாக்கு கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார். பாஜகவிடம் அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை எதுவும் இல்லை என்று சீமான் கடுமையாக விமர்சித்தார். மேலும், பாஜகவின் அரசியலை ஒரு சந்தைப்படுத்தல் உத்தி என்று அவர் வர்ணித்தார்.
ராமரை வைத்து “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்தை நீண்ட காலமாக பாஜக பயன்படுத்தியதாகவும், அயோத்தியில் கோவில் கட்டும் வரை இது நீடித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தேர்தலுக்கு முன்பு அவசரமாக கோவிலை திறந்துவிட்டதாகவும், அயோத்தியில் அவர்கள் நிறுத்திய வேட்பாளர், அகிலேஷ் நிறுத்திய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டதால், “ராமருக்கு மதிப்பு போய்விட்டது, மார்க்கெட் போய்விட்டது” என்று அவர் கூறினார்.
ராமருக்குப் பிறகு, பாஜக ஒடிசாவில் பூரி ஜெகநாதரை எடுத்ததாகவும், கேரளாவில் ஐயப்பனை தொட்டுப் பார்த்ததாகவும், பின்னர் சிவனை எடுத்ததாகவும், ஆனால் எதுவும் எடுபடவில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.
தற்போது முருகனை பாஜக குறிவைத்துள்ளதாக சீமான் கூறினார். திமுகவும் முருகன் மாநாடு நடத்தியுள்ளதை அவர் நினைவுபடுத்தினார். முருகன் தனது “முப்பாட்டன்” என்று குறிப்பிட்ட சீமான், பாஜகவினர் முருகனை அரசியலுக்கு பயன்படுத்துவதை சாடினார். முருகன் தமிழ் இறைவன் என்றும், முருகனைப் போற்றிப் பாட தமிழில் மந்திரங்களோ, திருப்புகழோ, திருமுருகாற்றுப்படைகளோ அவர்களுக்குத் தெரியாது என்றும், இது தமிழர்களின் வாக்குகளைப் பறிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டினார்.