பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?: காங்கிரஸ்!

மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு மோடியால் செல்ல முடியாதா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடிக்கு 35-வது முறையாக வெளிநாடு பயணம் செல்ல நேரம் உள்ளது. ஆனால் மக்களின் துயரம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்கு செல்ல நேரமில்லையா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

பிரதமர் மோடி மேற்கு ஆசியாவில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடானா சைப்ரஸ் மற்றும் கனடா, குரேஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். இதையடுத்து இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். தனது பயணத்தின் முதல் நாளாக இன்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் செல்கி றார். சைப்ரஸ் நாட்டு அதிபரான நிகோஸ் கிறிஸ் டோடூலிட்ஸின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அங்கு செல்கிறார். நாளை வரை அங்கே இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சைப்ரஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை கனடா செல்கிறார். அங்கு கன னாஸ்கிஸ் நகரில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்திருந்தார். இதன்மூலம் இரு நாட்டு உறவு மீண்டும் பலம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது

இந்தியா, கனடா உறவு குறித்து பெருமையாகப் பேசிய காலம் இருந்தது. ஆனால், அதன் பிறகு எல்லாம் தவறாகி விட்டன. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருப்பதால், ஜி 7 அல்லாத பல நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் ஜி 7 உச்சி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் கூறினார். கடந்த மே 2023 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் 35-ஆவது வெளிநாட்டுப் பயணம் இது. இதுபோன்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து ஆற்றல், உற்சாகம் அவரிடம் உள்ளது. ஆனால், மக்களின் துயரம், வேதனை மற்றும் துன்பம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்குச் அவரால் செல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.