2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.
2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று (ஜூன் 16, 2025) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக்டோபர் 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“லடாக், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்கள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் ஆகியவற்றின் பனிப்பொழிவு பகுதிகளைப் பொறுத்தவரை அக்டோபர் 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைப் பொறுத்தவரை மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடு முழுவதிலும் இருந்து மக்கள் தொகை தொடர்பான தரவுகளை திரட்டும் இந்த மிகப்பெரிய பணியில் சுமார் 34 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், சுமார் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் டிஜிட்டல் சாதனங்களுடன் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும்” என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்பு தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர், பதிவாளர் ஜெனரல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருதுஞ்சய் குமார் நாராயண் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொரு வீட்டின் நிலை, சொத்துக்கள் மற்றும் வசதிகள் தொடர்பான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு (House Listing Operation-HLO) ஒரு கட்டமாகவும், ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர், அவர்களின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் தொடர்பான மக்கள்தொகை கணக்கெடுப்பு (Population Enumeration-PE) ஒரு கட்டமாகவும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி கணக்கெடுப்பும் பதிவு செய்யப்படும்.
இதற்கு முன் 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இம்முறை மக்கள்தொகை கணக்கெடுப்போடு, சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது. இது 16 வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்திற்குப் பிறகு நடத்தப்படும் எட்டாவது கணக்கெடுப்பு இது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிக கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.