என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன்: உதயகுமார்

என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்றவர்களை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றேன்.
அதனால் என்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற உத்தரவிட்டார். 2001ல் எம்எல்ஏவாகி அதே ஆண்டில் வருவாய்த்துறை அமைச்சராக பணிபுரிய வாய்ப்பு கொடுத்தார். ஓ.பன்னீர்செல்வம், என்னை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்தவேண்டாம், சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம். கோவை செல்வராஜ் போன்றோர்களை வைத்து ஓபிஎஸ் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின்விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்கிறேன்.

ஓபிஎஸ் வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஒரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால், நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறேன். நீங்கள் சொத்து குவித்ததாக அறிவித்தால் பொது வாழ்க்கையிலிருந்து விலக தயாரா என சவால் விடுகிறேன். என்னை மிரட்டி பார்த்தால் ஓபிஎஸ் குறித்து பல உண்மைகளை வெளியிடுவேன். இதனால் வெளியே தலைகாட்ட முடியாத நிலை அவருக்கு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.