அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்த முருகன் மாநாட்டு மேடையில் அதிமுகவினர் அமர்ந்து இருந்தது அடிமைசாசனம் எழுதி கொடுத்துவிட்டதை காட்டுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, 10 கல்லூரிகளைத் தொடங்க அனுமதி பெறப்பட்டு, முதல் கட்டமாக 4 கல்லூரிகள் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பாட்டில் உள்ளன. 25 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கிறது. 136 கோடி ரூபாய் செலவில் ஆய்வகங்கள், நூலகங்கள், மற்றும் கூடுதல் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் 3117 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 117 முருகர் கோவில்களுக்கு குடமுழுக்கு முடிந்து, 136 கோவில்களுக்கு பணிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 843 முருகர் கோவில் பணிகள் 1043 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. 2 கோவில்களில் இருந்த முழுநேர அன்னதான திட்டம் 19 கோவில்களுக்கு விரிவாக்கப்பட்டு, ஆண்டுக்கு 3.5 கோடி பக்தர்கள் பயன்பெறுகின்றனர். 734 கோவில்களில் இருந்த ஒரு வேளை அன்னதானம் 784 கோவில்களுக்கு விரிவாக்கப்பட்டு, இதற்காக ஆண்டுக்கு 130 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
ஒரு கோவிலில் மட்டும் இருந்த மருத்துவமனை வசதி, தற்போது 14 கோவில்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அறம் மற்றும் கல்வியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. பக்தர்களின் ஆன்மீக மற்றும் உடல் பசியை தீர்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளதாக அமைச்சர் கூறினார்.
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பட்டது குறித்த கேள்விக்கு, “அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர். அண்ணாமலை இருக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்கிறார்கள். முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சன வீடியோ வெளியீடு செய்யப்பட்டது. அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததற்கு இதுவே உதாரணம்” என கூறினார்.
மதுரையில் நடைபெற்ற முருகர் மாநாடு ஆன்மீக மாநாடு அல்ல, அரசியல் மாநாடு என்று அமைச்சர் விமர்சித்தார். “அரசியலையும் ஆன்மீகத்தையும் கலக்காதீர்கள் என்பது எங்கள் நிலைப்பாடு. இந்த மாநாடு ஒரு நாள் கூத்து, கூடி கலைந்த மேகக் கூட்டம்,” என்றார். “அண்ணாமலை, எச்.ராஜா போன்றவர்கள் திராவிடத்தை அழிப்போம் என்று பேசுகின்றனர். ஆனால், இந்த மேடையில் அமர்ந்தவர்கள் தங்கள் இயக்கத்தை அடிமைப்படுத்தியுள்ளனர்,” என்றார்.
“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? அவர் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதன்பின் பேசலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை எடுத்து, ‘நாட்டு நட்டாயா, கலை பறித்தாயா’ என்று அவரை திருப்பி தாக்க வேண்டியிருக்கும்,” என்று அமைச்சர் கூறினார்.
2021 தேர்தலில் வேல் யாத்திரை நடத்திய பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்ததாகவும், இந்த முருகர் மாநாடு பாஜகவுக்கு ஆதரவாக இருக்காது என்றும் அமைச்சர் கூறினார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பாஜகவுக்கு பூஜ்யம் தான் கிடைக்கும்,” என்று உறுதியாக தெரிவித்தார்.
மாநாடு அண்ணாமலை மற்றும் நைனார் நாகேந்திரன் இடையேயான உள் கட்சி போட்டிக்காக நடத்தப்பட்டதாகவும், “ஒருவர் காவி துண்டு, மற்றவர் பச்சை துண்டு சுற்றி போட்டியிடுகின்றனர்,” என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
வெள்ளையர் ஆட்சியில், திருக்கோவில்களை கம்பெனிகளாக நடத்தி, வருவாயை கொள்ளையடித்தவர்களை கட்டுப்படுத்த 1959-ல் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இத்துறை ஒழுங்குமுறையுடன் செயல்படுகிறது. முருகர் மாநாட்டில் பவன் கல்யாண், அண்ணாமலை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 2026 தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைந்து தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கூறியதை அமைச்சர் விமர்சித்தார். “பவன் கல்யாணின் பேச்சு திமுகவுக்கு பாதகம் இல்லை. மக்கள் 2026-ல் பாஜகவுக்கு பதில் சொல்வார்கள்” என்றார்.
