மாணவி மரணம்: தவறு செய்தவர்களுக்கு தண்டணை பெற்று தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் இயங்கிவரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இறப்பிற்கு பள்ளி நிர்வாகமே காரணம் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த விவகாரத்தில், தவறு செய்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் – செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்ததாகவும், அவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்பு மகளை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தியை அறிந்த உடன், கட்சியின் சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழிதேவனை நேரில் சென்று, அந்த குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறும்படி அறிவுறுத்தினேன். இந்த சம்பவம் குறித்து காவல் துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில், நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்று த்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.