அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்டவிரோத குவாரி நடக்கிறதா?: உயர் நீதிமன்றம்!

சட்டவிரோத குவாரிகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகாரிகளின் கூட்டு சதியுடன் சட்ட விரோத குவாரி தொடர்கிறதா? என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், அரசின் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால், அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இது போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோத கனிமவள குவாரிகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட விரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரி இருந்தார்.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள், “சட்ட விரோத குவாரிகள் உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளம் நமது நாட்டின் சொத்து, அதை ஒரு போதும் திருடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அதிகாரிகள் அதற்கு துணை போகக்கூடாது” என கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாரட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்ட விரோத குவாரி முன்பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக குவாரிகள் மணல் அள்ளப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாக புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். இதனை பார்த்த நீதிபதிகள், “இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? அல்லது வேறுவிதமாக நடக்கின்றனவா?” என கேள்வி எழுப்பினர். அதிகாரிகளின் இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தனர்.

மேலும், “இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வருகிற ஜூலை 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.