திருச்சி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் சீமான்!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2018ல் திருச்சி விமான நிலையத்தில் நாதகவினருக்கும் மதிமுகவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் சீமான் இன்று ஆஜரானார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து மதிமுகவினர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்தனர். நாம் தமிழர் கட்சியினர் மதிமுகவினர் மீது புகார் அளித்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் வரும் ஜூலை 19 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.