மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேரை விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நாம் தமிழர், மதிமுக கட்சியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவித்து, சீமான் உள்பட இருதரப்பைச் சேர்ந்த 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 16 ஆம் தேதி திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், வழக்கின் தீர்ப்பை ஜூலை 19 இல் வழங்குவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மோதல் வழக்கில் சீமான் உள்ளிட்ட இருதரப்பைச் சேர்ந்த 19 பேரையும் விடுவித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
