அவரால் வர இயலாவிட்டாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும்: துர்கா ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ‘அவரும், நானும்’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர் புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி, ‘அவரும் நானும்’ புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தின் 2-ம் பாகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது கணவர் குறித்து குமுதம் சினேகிதி இதழில் ஐந்து ஆண்டுகளாக ‘தளபதியும் நானும்’ என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். இந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அந்தத் தொடர் தொகுக்கப்பட்டு 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ‘அவரும் நானும்’ புத்தகத்தின் இரண்டாவது பாகம் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நூலின் முதல் பிரதியை டாப்ஸி குழுமத் தலைவர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக்கொண்டார். நூலின் சிறப்பு பிரதிகளை ஸ்டாலினின் பேரன்கள் இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் பேசியதாவது:-

‘அவரும் நானும்’ நூலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் ஸ்டாலினுக்கு பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்காக நேரம் ஒதுக்கியது மட்டுமல்லாமல், தனக்குக் கிடைத்த நேரத்தில் இந்த நூலைப் படித்து, எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி, இந்த நூலுக்கு அன்புரையும் எழுதிக்கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரால் வர இயலாவிட்டாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருக்கும் எனது கணவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சொல்லப்போனால், கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்குப் போய், நல்லபடியாக நடத்திவிட்டு வா என்று வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, தங்களுடைய பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வந்திருக்கும் துணை முதலமைச்சர் (இவ்வாறு சொன்னதும் உதயநிதி மற்றும் அவரது மகன் இன்பநிதியும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்), தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2010-ல் எனது தொடர் முதன்முதலில் வெளிவந்தபோது, அப்போது எனது தொடர் ‘தளபதியும் நானும்’ என்றுதான் வெளிவந்தது. எனது கணவர் தான் ‘நானும் அவரும்’ என்று மாற்றினார். தொடரைப் படித்துவிட்டு என்னைப் பாராட்டுவார், எனது அத்தை. அவருக்கு வர இயலாத சூழல். அதேபோல், என் மேல் பிரியம் கொண்டு வந்தவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகையில் வெளிவந்த இரண்டாம் பாகத் தொடருடன், 2020-ம் ஆண்டுக்குப் பிறகு, குறிப்பாக எனது கணவர் முதல்வரான பிறகு நடந்த நிகழ்வுகளைப் புதிய அத்தியாயங்களாக இந்த நூலில் சேர்த்திருக்கிறோம். இந்த நூல் நிறைய வண்ணப் புகைப்படங்களுடன் வெளிவந்துள்ளது.

முழுமையாக எனக்கு ஆதரவளித்து, என்னை உற்சாகப்படுத்தி, எழுத ஊக்குவித்த எனது கணவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எங்கள் மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, எனது மகள் மற்றும் மாப்பிள்ளை சபரீசன் ஆகியோர் இந்த நூலில் எனது கணவர் பற்றியும், அவர் முதல்வரானது பற்றியும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.