அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு!

மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இடைக்கால இழப்பீடாக, ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கின் சாட்சிகள் 5 பேர் மற்றும் காவல்துறை தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த 18 ஆம் தேதி மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

இந்நிலையில் உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்காக தனிப்படை காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டிருந்த பிரவீன்குமார் (கோயில் ஊழியர்) வினோத்குமார் ( அஜித்குமார் நண்பர்), அருண்குமார் (காரை பார்க் செய்த ஆட்டோ டிரைவர்), நவீன் குமார் (அஜித்குமார் தம்பி) ஆகிய 4 பேர் 2 ஆவது முறையாக இன்று மதுரையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ டிஎஸ்பி மோகித் குமார் தலைமையில் நான்கு பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், அஜித் குமார் கஸ்டடி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தனது விசாரணை அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இன்று அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏழு நாட்களில் முடிவெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கிய 7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு போதுமானதல்ல. கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு. வழக்கிற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசு, ரூ. 7.5 லட்சம் இழப்பீடும், இலவச வீட்டு மனை பட்டா, அரசு வேலை வழங்கி உள்ளது. கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். விசாரணையில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.