மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு!

மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அவரது பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்ய அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், உடற்கூராய்வின்போது பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது பெற்றோர், தங்களது மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யும்போது அதில் தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரையும் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அவர்களது இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வேண்டுமானால் உடற்கூறாய்வின்போது மாணவியின் பெற்றோர் தங்களது வழக்கறிஞடன் அதில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தங்களது மகளின் மறு உடற்கூராய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், மாணவி பெற்றோர் அவர்களின் வீட்டில் இல்லாததுடன், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. உடற்கூராய்வு நிபுணர்கள் வந்துவிட்டதால், மாணவியின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு உடற்கூராய்வை தொடங்கலாமா எனக் கோரி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று காலை முறையீடு செய்தார். பள்ளி மாணவி உடல் மறு உடற்கூராய்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில் அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, “உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறு உடற்கூராய்வு நடைமுறையை தொடங்கலாம்” என்று நீதிபதி என்.சதீஷ்குமார் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவியின் தந்தை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தங்கள் தரப்பு கோரிக்கை ஐகோர்ட்டில் ஏற்கப்படாததால் மாணவியின் பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.