உத்தராகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் மின்சாரம் தாக்கிதயதாக தகவல் பரவியதையடுத்து பக்தர்கள் அங்கிருந்து இறங்கிச் செல்ல முயற்சித்துள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ஓட முயற்சித்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக தகவல் பரவியதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மின்கம்பத்தில் உண்மையிலேயே மின்கசிவு ஏற்பட்டதா அல்லது யாரேனும் வேண்டுமென்றே வதந்தி பரப்பினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
