புதுச்சேரியில் பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை: ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தற்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி தவளைகுப்பத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டார். புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுவதாக கடந்த 2022-2023 பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அரசிடமிருந்து எந்த விதமான உரிமைத் தொகையும் பெறாத மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அனைத்து பெண்களுக்கும் இந்த உதவித்தொகையை வழங்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வந்தது.

இந்த நிலையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டு புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தான் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 1 கோடியே 15 லட்சம் பெண்கலுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இன்னும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர். விரைவில் கூடுதலான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.