செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு கலந்துரையாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் ‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து பேசினார். உயர் கல்வி துறை செயலர் பொ.சங்கர் சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, உயர்கல்வி மன்ற துணை தலைவர் எம்.பி.விஜயகுமார் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். மன்றத்தின் உறுப்பினர் செயலர் டி.வேல்முருகன் நன்றி கூறினார். விழாவில், கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழா முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-
தற்போது அரசு கல்லூரிகளிலும் ஏஐ மற்றும் அதுதொடர்பாக புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உயர்கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப் புற மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில், அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
