பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது: நயினார் நாகேந்திரன்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்த பிரதமர் மோடியின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (நேற்று)பாராளுமன்றத்தில் நமது பிரதமர் மோடி அவர்களின் உரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

எல்லைதாண்டி மதத்தின் அடிப்படையில் இந்தியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழித்துவிட்ட பயங்கரவாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியைப் பாராளுமன்றத்தில் விவரித்து, உள்நாட்டில் தேசப்பற்றின்றி போலி அவதூறுகளைப் பரப்பும் இண்டிக் கூட்டணியினருக்கு இன்று தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார் நமது பிரதமர் அவர்கள்.

தொடர்ந்து இந்திய இராணுவத்தின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யுரைகளைப் பரப்பி, மக்களை திசைதிருப்பப் பார்க்கும் காங்கிரஸ் கூட்டணியினரின் வித்தைகள் மக்களவையில் இன்று அம்பலப்பட்டுவிட்டது. இனியொருமுறை நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அற்பத்தனமாக அரசியல் செய்ய முனைவதற்கு காங்கிரஸ் கட்சி ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

தீவிரவாதத்தால் தனது திலகத்தை இழந்த ஒவ்வொரு இந்தியப் பெண்ணுக்கும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதோடு, இந்திய ராணுவத்தினருக்கு உறுதுணையாக இருந்து, “இந்தியா எதையும் மறப்பதுமில்லை, யாரையும் மன்னிப்பதும் இல்லை” என்பதை மீண்டுமொருமுறை தனது உரையின் மூலம் உலகறியச் செய்துள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.