தைலாபுரம் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணியாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ள ராமதாஸ், ஒட்டுக்கேட்பு கருவியை அன்புமணியை தவிர வேறு யாரும் வைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:-
உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால் இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். வேறு யார் வைத்திருக்க முடியும். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும், நான் தனியாக சிறப்பு அமைப்பு மூலமாகவும் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை அன்புமணி சொல்கிறார். தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், 100 மாவட்டச் செயலாளர்களை அன்புமணி போனில் அழைத்து, கூட்டத்துக்கு போகவேண்டாம் எனச் சொல்லி நிறுத்தினார். என்னை சந்திக் கக் கூடாது என சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.
96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது. பாமக நான் உருவாக்கிய கட்சி; நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம். பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, தலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் பாமகவின் விதிகளுக்கு எதிரானது. பூம்புகாரில் வரும் 10-ம்தேதி நடை பெற உள்ள மகளிர் மாநாட்டில் 3 லட்சம் மகளிர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பிகார் மக்கள் வாக்களிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
