தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகளை வரும் 5ம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தும் என்று அக்கட்சயின் அமைப்புச் செயலாளரும் எம்பியுமான கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் திருச்சூரில் செய்தியாளர்களிடம் கே.சி. வேணுகோபால் கூறியதாவது:-
பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்ஐஆர்) நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஜனநாயக மதிப்பீடுகளை தேர்தல் ஆணையம் திட்டமிட்ட ரீதியில் சீர்குலைத்து வருகிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அது அப்படி செயல்படவில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. நியாயமான முறையில் ஜனநாயகம் எவ்வாறு செயல்பட முடியும்? தேர்தல் ஆணையத்தின் கடுமையான முறைகேடுகள் குறித்து வரும் 5ம் தேதி பெங்களூருவில் நாங்கள் வெளிப்படுத்த உள்ளோம். இண்டியா கூட்டணியின் தலைவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு வரும் 7ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
