‘சீபெக்’ பொருளாதார வழித்தடம்: இந்தியா கடும் எதிர்ப்பு!

எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அரிந்தாம் பக்சி கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே ‘சீபெக்’ என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சீபெக்கின் 3-வது ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இணைய விரும்பும் எந்தவொரு சர்வதேச நாட்டையும் பொருளாதார கூட்டணியில் திறந்த மனதுடன் வரவேற்பதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அரிந்தாம் பக்சி கூறியதாவது:-

சீனா பாகிஸ்தான் உடன் இணைய, சில நாடுகள் அதில் பங்கேற்பதாக தகவல்கள் வருகின்றன. இதை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது போன்ற எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானால் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய எல்லை பகுதிகளில் அமைக்கப்படும் இந்த திட்டத்திற்கு, தொடர்ந்து இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு இந்தியா தகுந்த முறையில் பதிலடி அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, வழித்தடங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் குவாதார் துறைமுகம் தொடங்கி அங்கிருந்து சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பகுதி வரை இத்திட்டம் இணைப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் சாலைகள், ரெயில் தடங்கள், குழாய் மூலம் எண்ணெய் வினியோகம் போன்றவை ஏற்படுத்திட சீனா முயன்று வருகிறது. இதன் மூலம் சீனா – மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தவும் தொடர்பு ஏற்படுத்தவும் முயற்சித்து வருகிறது. இத்திட்டத்திற்கு பலுசிஸ்தான், கைபர் பகுதியில் இருப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் அதே வேளையில் பாகிஸ்தானின் பிற பகுதிகள் மற்றும் சீனாவுக்கு அதிக பலன்கள் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.