தமிழர்களைப் புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம்: டிடிவி தினகரன்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழர்களை தொடர்ந்து புறக்கணிப்பதாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளன. இதனைக் கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கைவெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

உடனடியாக புதிய பொறியாளர் தேர்வு பட்டியலை ரத்துசெய்துவிட்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும். என்.எல்.சி நிறுவனம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கி போராடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.