சிரிப்பு : மருத்துவ பலன்கள் – டாக்டர். ஜி. வரதராசன்

பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங்களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வருவது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக்கூடியதாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவுகளால் தூண்டப்படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால்களின் தசைகளும் இயக்கப்படுகிறது.

முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிப்பையும் கையாளுகிறது.

பெரும்பாலான சிரிப்புகள் ஜோக் அடிப்பதால் வருவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், பேசும்போதும் இயல்பாக சிரிப்பு வருகிறது. இது சமூகப் பிணைப்பின் அடையாளம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

சிரிப்பினால் பேச்சு தடைபடுவதில்லை… அதே சமயம், ஒரு நிறுத்தற் குறி மாதிரி சிரிப்பு பயன்படுகிறது.

சிரிப்பின் முன்னோடி

மனித சிரிப்பின் முன்னோடி நமது மூதாதையரான குரங்குகள் பல்லை விரித்துக்காட்டுமே.. அதுதான் என்கிறார்கள். எல்லா விலங்குகளுமே விளையாடும் போது வித்தியாசமான ஒலி எழுப்பத்தான் செய்கின்றன. அதாவது சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தச் சிரிப்புகள் அனைத்தும் மனித சிரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதனால் அவற்றை சிரிப்பாக நாம் எடுத்துக் கொள்வதில்லை.

சிரிப்பு விளையாட்டோடு தொடர்புடையது. நாம் குஷி மூடில் இருந்தால் தான் சிரிப்போம்… இல்லாவிட்டால் உம்மென்றுதான் இருப்போம். நமக்கும் விளையாட்டுக்கும் இடையில் தூரம் அதிகம் என்பதால் தான், பெரியவர்களை விட சிறுவர்களே அதிகமாக சிரிக்கிறார்கள். இதுதான் உண்மை என்கின்றன ஆய்வுகள்.

சிரிப்பை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், சிரிப்பைக் கூட பிரித்துப் பார்க்கலாம்.. யாரைப் பார்த்து சிரிக்கிறோம்.. யாருடன் சிரிக்கிறோம் என்பதிலிருந்து நமது சிரிப்பின் தன்மை தெரியவரும்.

அசட்டுச்சிரிப்பு என்பது, இக்கட்டான நிலையில் நாமாக வலிய சிரிப்பது, நாம் பிறரை தவிர்க்க முனைதல். ஏளனச் சிரிப்பு இருக்கிறது, அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கு இதை பயன்படுத்துகிறோம். கர்வச்சிரிப்பு இருக்கிறது,

தன்னைத்தானே உயர்வாக நினைப்பதைக் குறிக்கிறது. இதைபோல் இளநகை, குரு நகை, குரூர நகை என சிரிப்பை நாமாக வேறுபடுத்திக்கொள்ளலாம்.

இயல்பான சிரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. தானாக வருவது, நகைச் சுவையால் வருவது, அதாவது உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு.

நாம் எதையாவது நகைச்சுவையான ஒன்றைப் பார்த்தால் சிரிக்கிறோம். நமக்கு வித்தியாசமாகத் தெரிவதைப் பார்த்து சிரிக்கிறோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வயதினருக்கு வித்தியாசமாகப்படும். சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினமும் பதினேழு முறை சிரிக்கிறார்கள்.

மருத்துவப் பலன்கள்

வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். மனஇறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு.

மரம் அறுக்கும் வேலையில் ஈடுபடும் பத்து நிமிட உழைப்பிற்கு ஈடானது நூறு முறை சிரிப்பது என்கிறார்கள். சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது. நமது மன நலனை மேன்மையுறச் செய்கிறது. பயம், கோபம் போன்ற எதிரிடை எண்ணங்களை மாற்றுகிறது.

சிரித்தே நோயைப் போக்கலாம் என்பதற்காக மும்பையில் சிரிப்பு கிளப் ஆரம்பிக்கப்பட்டு பல கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

சிரிக்கத் தெரியாதவனை மிருகம் என இகழும் உலகம் சிரிக்கத் தெரிந்தவன், வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவன் எனப் போற்றுகிறது. நீங்கள் எப்படி?