ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருப்பதை புரிந்து கொள்ளுங்கள்: தமன்னா

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக தமன்னா குறித்து காதல் கிசுகிசுக்கள் அதிகம் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, “எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. இதை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

தமன்னா இதற்கு முன்பு தமன்னாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளையை பார்த்து முடிவு செய்து இருப்பதாகவும், மணமகன் மும்பையை சேர்ந்த பெரிய தொழில் அதிபர் என்றும், அவரை மணக்க தமன்னாவும் சம்மதித்துவிட்டார் என்றும் தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.