நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் வதந்தி!

நடிகர் சரத்பாபு காலமானதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் அவர நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்பாதீர் என்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத் பாபு. மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடம், இந்தி , மலையாள படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார். 90 களில் ரஜினிகாந்த் மற்றும் சீரஞ்சீவி உடன் சரத் பாபு நடித்த படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் சரத்பாபு நடித்துள்ளார்.

இந்த நிலையில், சரத்பாபு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உடல் முழுவதும் தொற்று ஏற்பட்ட நிலையில் அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதை சரத்பாபு குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இது குறித்து சரத்பாபுவின் பிஆர்ஓ வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சரத்பாபு உடல்நலம் தேறி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என பிஆர்ஓ குறிப்பிட்டுள்ளார்.