விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம்!

தனது பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துகளை தெரிவித்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். சமீபத்தில் மாநில அளவில் 10, +2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தனது கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார். இதுதவிர கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனது பிறந்தநாளையொட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தனது ரசிகர்களுக்கு விஜய் தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார். தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈசிஆர் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கு தனது கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார் விஜய். அந்த கடிதத்தில், “கடந்த ஜூன் 22 அன்று எனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக நீங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்தேன். உங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன், நன்றி. – பிரியமுடன் விஜய்” என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு கைப்பட எழுதிய இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. ரசிகரின் செயல்பாட்டை மனம் திறந்து பாராட்டி ஊக்கப்படுத்திய விஜய்க்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.