அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை நந்திதா ஸ்வேதா!

நடிகை நந்திதா ஸ்வேதா தனக்கு ஏற்பட்டிருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான ‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகிற்கு நடிக்க வந்தவர் நந்திதா ஸ்வேதா. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை நந்திதா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக புரமோஷன் ஒன்றில் பேசிய அவர், தனக்கு பைப்ரோமியால்ஜியா எனும் அரிய வகை தசை பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் சாதாரண வேலைகள் செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்படுவதாக கூறியுள்ளார். இந்த நோயால் உடற்பயிற்சி செய்ய முடியாது என்றும், ஆனாலும் கடினமாக முயற்சி செய்து எனது உடல் எடையை குறைத்து தெலுங்கு படமான ‘ஹிடிம்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பைப்ரோமியால்ஜியா நோயால் சில நேரங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் நிலை உள்ளதாகவும், இதனால் நினைவாற்றல் குறைபாடு. உடல் சோர்வு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நந்திதா ஸ்வேதா கூறியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தென்னிந்திய சினமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் எனும் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஓராண்டு அவர் படங்களில் நடிப்பதிலிருந்து விலகி இருக்க போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நந்திதா பைப்ரோமியால்ஜியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.