நான்கு நாட்களில் ஜெயிலர் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது. பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியான ஜெயிலருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த வாரம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரசிகர்களால் எதிர்பார்த்ததைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கம்பேக் படமாக ஜெயிலர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆனாலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் என்ட்ரியாகும் சீன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது. அதேபோல், மோகன்லால் வரும் காட்சிகளுக்கும் ரசிகர்களின் கொண்டாட்டம் தாறுமாறாக உள்ளதாம்.

இந்நிலையில், ப்ரீ புக்கிங் மூலம் படம் வெளியாகும் முன்பே 12 கோடி வரை வசூலித்தது ஜெயிலர். மேலும், முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் ஜெயிலர் வசூல் 100 கோடி ரூபாயை கடந்தது. சனிக்கிழமையான மூன்றாவது நாளும் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. இதனால் 40 முதல் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் 4வது நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் மட்டும் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். தமிழ்நாட்டில் வசூல் 24 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனால் முதல் நான்கு நாட்களில் ஜெயிலர் வசூல் 200 கோடி ரூபாயை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.