அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டா தைரியமாக பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும்: ரம்யா நம்பீசன்!

நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார்.

சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற விஷயம் நடிகைகளை போட்டு படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்காமல் அவர்களிடம் வேறு ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இப்போதைய காலம்வரை தீர்ந்தபாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அட்ஜெஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகையும், பாடகியுமான ரம்யா நம்பீசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையில் இருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்” என்றார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ரம்யா நம்பீசன் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் லீடு ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தமிழில் ஒருநாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் விஜய் ஆண்டனியுடன் தமிழரசன் படத்தில் நடித்திருந்தார். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் முத்திரை பதித்தவர் ரம்யா நம்பீசன். பாண்டியநாடு படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை பாடலின் மூலம் பாடகியாக பிரபலமடைந்த அவர் தமிழில் இன்னும் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.