தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்: ஐஸ்வர்யா லட்சுமி!

அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளம், தெலுங்கிலும் நடித்து வரும் அவர், ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கூறியதாவது:-

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நான் நடித்த பூங்குழலி பாத்திரம் எனக்கு மிகுந்த வரவேற்பைக் கொடுத்துள்ளது. இது நான் எதிர்பாராதது. இந்தப் படம் எனக்குப் பல கதவுகளைத் திறந்துள்ளது. வாய்ப்புகள் மட்டுமல்லாமல், மக்கள் மனதிலும் சிறந்த இடம் கிடைத்திருக்கிறது. இதனால் என் முந்தைய படங்களையும் பார்க்கிறார்கள். சவாலான, இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே நினைக்கிறேன். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. தரமான படங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். நல்ல கேரக்டர் என்றால் சிறிய வேடத்திலும் நடிப்பேன். இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.