எனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்: ரஜினிகாந்த்

ஞானவேல் இயக்கவுள்ள தனது 170வது படம் நல்ல கருத்துள்ள பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினியுடன் பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரத்தை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் செல்கிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். ’ஜெயிலர்’ திரைப்படம் நான் எதிர்பார்த்தைவிட பெரும் வெற்றி பெற்றுள்ளது. என்னுடைய 170-வது படம் நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். இதனை ஞானவேல் இயக்குகிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் ஃபகத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது.