விஜய்க்கு வருமான வரித் துறை ரூ.1.50 கோடி அபராதம்: வழக்கு 30ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

புலி திரைப்படத்திற்கு ரூபாய் 15 கோடி சம்பளம் பெற்றதை மறைத்ததாக, நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்துள்ளது வருமான வரித்துறை. இதனை எதிர்த்து விஜய் தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையானது வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.