சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ பார்த்த த்ரிஷா!

விஜய்யின் ‘லியோ’ படம் வெளியானதையடுத்து, சென்னை – ரோகிணி திரையரங்கில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்த சிக்கலால் நேற்று பிரதான திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தையின் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் படம் வெளியானது.

இந்நிலையில், படத்தின் நாயகி த்ரிஷா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் தனது தாயுடன் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து ‘லியோ’ படத்தை கண்டு ரசித்தார். முதல் காட்சியை லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் பார்த்த பின்பு, அவர்கள் ரோகிணி திரையரங்குக்கு வந்தனர். அப்போது அனிருத் ரசிகர்களிடையே பாட்டு பாடி நன்றி தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ வைரலாகி வருகிறது.